தலைவா படத் தயாரிப்பாளரிடம் இருந்து ஜில்லாவுக்கு விடுதலை பெற்ற விஜய்க்கு ஆடுத்த ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னையை அடுத்துள்ள சேலையூரை சேர்ந்தவர் ஆர்.மகேந்திரன். இவர், சென்னை 16–வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த ‘பகீரதா‘ என்ற படத்தை தமிழில் ‘ஜில்லா’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்தேன். இந்த ‘ஜில்லா’ என்ற படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி. தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008–ம் ஆண்டு பதிவு செய்தேன்.
இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட ஜில்லா படத்தை திரையரங்குகளில் வெளியிட தணிக்கை சான்றிதழை 28–5–2008 அன்று பெற்றுள்ளேன். இதன்பின்னர் இந்த படத்தை வெளியிட தகுந்த நேரத்தை பார்த்து காத்திருந்தேன்.இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படம் வருகிற 10–ந்தேதி வெளியாகப் போவதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எனவே விஜய் நடித்துள்ள ஜில்லா என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டு உத்தரவின்படி, எதிர்மனுதாரரான ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பலருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.